திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. இதற்காக மாலை 4.25 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காக கடற்கரைக்கு எழுந்தருளினார்.
கடற்கரையில் மாலை 6 மணிக்கு யானை முக சூரனை வதம் செய்தார். 6.15 மணிக்கு சிங்கமுக சூரனையும், 6.30 மணிக்கு சூரபத்மனின் தன் சுயரூபமான பத்மாசூரனையும் வதம் செய்தார். அதன் பின்னர் சூரனை சேவலாகவும், மயிலாகவும மாற்றி தன்னுடன் சேர்த்துக்கொண்டார். பிறகு கடற்கரை சந்தோச மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடி, பானகம் அருந்தி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர். விழாவில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ,வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் 7-ம் நாளான இன்று இரவு 11.30 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
Key word:திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

No comments:
Post a Comment