Pages

Monday, 15 October 2012

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் !


தன் கலயத்தைக் குழாயடியில் கழுவிக்கொண்ட முருகன் நீரைப் பிடித்துக் குடித்தான். மீண்டும் பசிக்கும் போது குடிக்கலாமே என்று கலயத்தில் நீரை நிரப்பிக் கொண்டான். அதனைச் சுமந்து கொண்டு அடுத்த ஊர் நோக்கி நடந்தான். அந்த ஊரிலாவது வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டே நடந்தான். உச்சி வேளை நல்ல வெய்யில் நேரம். உச்சி வெய்யில் தலையைப் பிளந்தது. வயல் வெளியைத்தாண்டி நடந்தான். பசுமையான மரங்கள் தெரிந்தன. அதனிடையே பெரிய கட்டடம் ஒன்று தெரிந்தது. நிறைய மக்கள் அங்கும் இங்குமாகச் செல்வதை கேசவன் பார்த்தான். சற்று இளைப்பாறுவதற்காக அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்தான். களைப்பால் கண்கள் மூடியிருந்தன.

"தம்பி!" யாரோ அழைக்கவே கண்களைத் திறந்து பார்த்தான்.
" தம்பி, ரொம்ப தாகமாயிருக்கு. கொண்டாந்த தண்ணி காலியாயிடுச்சு . இந்தத் தண்ணி நல்ல தண்ணிதானே! கொஞ்சம் தரியா?"
வயதான கிழவர் பரிதாபமாகக் கேட்டார். கொஞ்ச நேரம் யோசித்தவன், சரியென்று அவரிடம் கலயத்தை நீட்டினான்.அதை வாங்கி மடமடவெனக் குடித்தவர் " அப்பாடா! அமிர்தமா ஜில்லுனு இருக்கு" என்றவாறு கேசவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கேசவன் கலயத்தைப் பார்த்தான். நீர் முழுவதும் காலியாகி இருந்தது. அவன் முகம் ஏமாற்றத்தால் வாடியதைக் கண்டார் பெரியவர்.

"தம்பி! இந்தச் சுற்று வட்டாரத்திலே கொஞ்சம் தண்ணி கஷ்டம். உப்புத் தண்ணிதான் கிடைக்கும். நல்ல தண்ணிக்கு கொஞ்ச தூரம் போகணும். இங்கே தாசில்தார் ஆபீசுக்கு வாரவங்க எல்லோரும் தாகத்திலே தவிக்கிறோம். நல்லவேளையா நீ தண்ணி கொண்டாந்தே. இந்தா இதை வாங்கிக்க ஏதாவது வாங்கிச் சாப்பிடு." என்றவாறே ஒரு இரண்டு ரூபாய்த் தாளை அவனிடம் கொடுத்தார். ஏதும் பதில் சொல்லத் தோன்றாமல் அந்த ரூபாயைப் பெற்றுக்கொண்டான் கேசவன். அவன் உள்ளம் ' குடிதண்ணீருக்கு இவ்வளவு கஷ்டமா இங்கு...' என்று எண்ணிப்பார்த்தது.

மறுநாள் காலை பத்து மணி. வெய்யில் தொடங்கி விட்டது. தலையில் பானையில் நல்ல நீரும் கையில் அலுமினிய தம்ளரும் வைத்துக் கொண்டு அதே இடத்துக்கு வந்தான். அவனைப் பார்த்தவர்கள் நாலைந்து பேர் அவனிடம் வந்து "என்ன அது?" என்றனர். " குடிதண்ணீர் " என்றபோது "எனக்கு, எனக்கு" எனக் கை நீட்டினர். ஒவ்வொருவருக்கும் நீர் கொடுத்தவன் "அய்யா! உங்களுக்கு விருப்பமானதைக் கொடுங்கள் " என்று கேட்டுப்பெற்றான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை வெகு தொலைவு நடந்து சென்று நீர் கொண்டு வந்து பலரின் தாகத்தைத் தணித்தான். மாலையில் காசுகளை எண்ணிப்பார்த்த பொழுது அவனால் நம்பமுடியாத அளவுக்குக் காசு சேர்ந்திருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டான்.

கேசவனது இந்தத் தொழில் தொடர்ந்தது. சில நாட்கள் சென்ற பின்னர் ஒரு பானை இரண்டு பானை ஆனது. நீர் நீர்மோரானது. அத்துடன் கடலை பிஸ்கட் மிட்டாய் வெற்றிலை பாக்கு என்று வாங்கிச் சென்று விற்று வர நல்ல காசு கிடைத்தது.

ஓராண்டு கழிந்தது. நகரத்தார் பலரது பழக்கம் ஏற்பட சிறியதாக ஒரு பெட்டிக்கடை போட்டு அங்கேயே தங்கிக் கொண்டான். முதல் நாள் மாலையே ஊருக்குள் சென்று பால் தயிர் நீர் தின்பண்டங்கள் என்று வாங்கி வந்து விடுவான். மறுநாள் காலை முதல் வியாபாரம் நடக்கும்.

இப்படியே வருடங்கள் உருண்டோட அங்கேயே சிற்றுண்டிச் சாலை வைத்தான். பல ஆண்டுகளாக கேசவனை அறிந்தவர்கள் அவனுக்கு உதவி புரிந்தனர். கடையில் நல்ல வருமானம் வந்தது. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் தன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தம்பி தங்கையர் நினைவு வந்தது. ஒரு விடுமுறை நாளாகப் பார்த்துப புறப்பட்டான். அனைவருக்கும் புதுத் துணி மணிகள் இனிப்புகள் பலகாரங்கள் பழங்கள் என வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

வயதாகிவிட்ட தன் தந்தை இன்னமும் வயலில் வேலை செய்வதையும் தன் பெரிய தம்பி அவருடன் நடவு செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். அவர் முன் சென்று வணங்கி நின்றான். அடையாளம் தெரிந்து கொள்ளாத முருகன் திகைத்தார். தன் மகன் கேசவன் என்பதைத் தெரிந்து கொண்டபின் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். மகிழ்ச்சியில் அவர் கண்கள் நீரைச் சொரிந்தன.

"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்" அன்றோ?

அனைவரும் அவனைத் தழுவி மகிழ்ந்தனர். அவர்களுக் கெல்லாம் கேசவன் வளமுடன் வந்ததில் மிக்க மகிழ்சசி.

" அப்பா! எல்லாரும் என்கூட வந்திடுங்க. உங்களை உக்கார வச்சு சோறு போடறேன். தம்பி தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். இன்னும் ஏனப்பா கஷ்டப் படுறீங்க?" என்ற கேசவனைப் புன்னகையுடன் பார்த்தார் முருகன்.

" இந்த உடம்பு உழைச்சுச் சாப்பிடற உடம்புப்பா .உக்கார இன்னும் காலம் வரலே. அந்தக் காலம் வரும்போதும் நீ என்னைக் காப்பாத்து. நாங்க சேத்திலே காலை வச்சாத்தாம்பா பட்டணத்துக்காரங்க

சோத்திலே கையை வைக்க முடியும். நீ நல்லா இருக்கே அதுபோதும் எனக்கு. உன் பெரிய தம்பியைக் கூட்டிக் கிட்டுப்போ . நல்லா வளமா இருங்கப்பா." என்றபடியே பேச்சை முடித்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடி விட்டுத் தன் தம்பியுடன் ஊர் திரும்பினான் கேசவன். மறக்காமல் அடுத்த தம்பி தங்கைகளைப் பள்ளியில் சேர்த்து விட்டுத்தான் வந்தான்.

வீட்டுக்குள் வந்தவுடன் சாமி படத்தின் முன் ஒரு கலயம் இருப்பதைப் பார்த்து "என்ன அண்ணே இது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் தம்பி.

" இதுவா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நினைவு படுத்தத்தான் இந்தக் கலயத்தை வைத்திருக்கிறேன். என் ஆரம்ப நாட்களின் நினைவுச் சின்னம் இது " என்று சொன்ன அண்ணனைப் புரியாத புன்னகையுடன் பார்த்தான் தம்பி.
Posted by Rukmani Seshasayee at 4:40 PM

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads