Pages

Friday 7 September 2012

மன்னாரு - சினிமா விமர்சனம்









இந்த மூஞ்சிக்கெல்லாம் இப்படியொரு அதிர்ஷ்டமா என்று இந்த ஒரு புகைப்படத்தை பார்த்தே புஸ்ஸாகிப் போனார்கள் பல புதுமுக ஹீரோக்கள்..! ஆனால் ஹீரோவான அப்புக்குட்டியோ தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த இந்த முதல் முத்தத்தை நினைத்தே இன்றுவரையில் உருகிப் போயிருக்கிறார்!

1985-90-களில் உள்ள போனோமா.. எதையும் மண்டைல ஏத்திக்காம வெளில வந்தோமா.. என்ற டைப்பில் வெளியான புல் எண்ட்டெர்டெயிண்மெண்ட் டைப் கதை இது..! இதன் கருவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஏற்கெனவே பல வடிவங்களில் கொத்துப் புரோட்டா போட்டுவி்ட்டார்கள் என்றாலும், இதில் புதிய நேட்டிவிட்டியில், புதிய திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர்!

கொடைக்கானலை பூர்வீகமாகக் கொண்ட அப்புக்குட்டி 3-ம் வகுப்பு வரை படித்துவிட்டு லாரியில் மணல் லோடு அள்ளும் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார். கூடவே மல்லிகா என்றொரு உறவுக்கார பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறார்.! ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் ஷகிலா போஸ்டரின் அழைப்பின்பேரில் பிட்டு படம் பார்க்கப் போகும் அன்றைய இரவில்தான் நம்ம அப்புக்குட்டிக்கு சனி பிடிக்கிறது..! அவ்வப்போது அறையில் தங்க இடம் கொடுக்கும் நண்பனுக்காக, அவனது ரிஜிஸ்தர் மேரேஜூக்கு சாட்சி கையெழுத்து போடப் போய்.. வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறான் மன்னாரு!


கல்யாணம் முடிந்த கையோடு நண்பனோடும், அவனது புது மனைவியோடும் மன்னாரு கொடைக்கானலுக்குக் கிளம்பும்போது பெண்ணின் அப்பாவும், வில்லன் கோஷ்டியும் தேடி வர.. மாப்பிள்ளை நண்பன் பயந்து போய் "நீங்க ரெண்டு பேரும் இதே பஸ்ல முன்னாடி போங்க, நான் பின்னாடியே வந்தர்றேன்.." என்று சொல்லி நின்று விடுகிறான்..!

அப்புக்குட்டியும், ஸ்வாதியும் மட்டும் கொடைக்கானலில் வந்திறங்கி ரூமில் தங்குவதற்காக கணவன், மனைவி என்று பொய் சொல்லத் துவங்க.. லாட்ஜில் நின்று கொண்டிருந்த அப்புக்குட்டியின் மாமா, அண்ணனிடம் சிக்கிக் கொண்டு ஊருக்குக் கொண்டு போகப்பட்டு, உண்மையைச் சொல்ல முடியாமல் தம்பதிகளாக காட்சியளிக்க வேண்டிய கட்டாயம்!

காதலித்த முறைப் பெண் அழுது வடிய.. இங்கே பெண்ணின் அப்பாவும், வில்லனும் கொலை வெறியோடு தேடத் துவங்க.. மாப்பிள்ளை போலீஸ் லாக்கப்பிலும், பின்பு வில்லனின் லாக்கப்பிலும் சிக்கிக் கொண்டிருக்க.. எப்படி முடிந்தது கதை என்பதை தியேட்டருக்கு போய் பாருங்க!

மனைவியாக அழைத்து வந்தவரை அப்படிச் சொல்ல முடியாமல் வேலைக்காரியாக காட்டும் கதைகள் நிறையவே வந்திருக்கின்றன..! தன் மனைவியை, நண்பனின் மனைவி என்று சொல்லும் ஆள் மாறாட்டக் கதைகளும் நிறையவே வந்திருக்கின்றன.. இதில்தான் இப்படியொரு தினுசான கதையை வைத்து கொஞ்சம் கவர்ந்திருக்கிறார் இயக்குநர்..!

அப்புக்குட்டி நிறைவாகவே நடித்திருக்கிறார்..! தண்ணியடித்துவிட்டு அவர் ஆடும் ஆட்டமும், பஸ்ஸில் அவர் செய்கின்ற கலாட்டாவும் மனிதருக்கு நகைச்சுவையும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறது..! மல்லிகாவை நினைத்து ஒரு பக்கம் கோபப்பட்டும், ஸ்வாதியிடம் பேசவும் முடியாமல் மனிதர் தவியாய் தவித்து மனதுக்குள் எதுவும் இல்லாத அப்பாவித்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார்!

ராட்டினம் ஸ்வாதி ஹீரோயின் என்றாலும், உடன் நடித்திருக்கும் வைசாலிதான் எனக்குப் பிடித்தமானவராக இருக்கிறார்! ஆள் நல்ல கலர்.. களையான முகம். இந்தப் படத்துக்காக கருப்பு மேக்கப்பை போட்டு கொஞ்சம் அழகை குறைத்துவிட்டார்கள்!

அந்த இயல்பான கிராமத்து இன்னொசென்ட் முகத்தை பார்த்த மாத்திரத்தில் கொண்டு வந்துவிட்டார்.. அப்புக்குட்டியின் கல்யாணச் செய்தி கேட்டவுடன் ஓடி வந்து பார்க்கும் அந்த வேகமும், அதே அப்புக்குட்டி தனது வீட்டு வாசலில் நிற்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு மருகுவதும்.. காதல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் எக்ஸ்பிரஷன்கள் ரொம்பவே இம்ப்ரஸ்ஸிவ்..! தற்கொலைக்கு முயலும் 2 காட்சிகளிலும் ஒரு பாட்டி தண்ணி இறைத்துக் கொடுக்கும்படி கேட்கும்போது எரிச்சலுடன் “சாகவும் விட மாட்டேன்றீங்களே..?” என்ற தனது வெகுளி குணத்தை கடைசிவரையிலும் காட்டியிருக்கிறார்.. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு ரவுண்டு வரலாம்..!



ராட்டினத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை நன்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார் இந்த ஸ்வாதி..! உருட்டும் விழிகளும், கேரளத்து மெதுவடை முகமும், உருளைக்கிழங்கு தோற்றமுமாக இன்னும் கொஞ்சம் அழகாய் காட்சியளிக்கிறார். அப்புக்குட்டியின் அப்பாவை குற்றம் சொல்லி பேசுகின்ற ஒரு காட்சியில் மட்டுமே ஏதோ ஒன்றாக நடித்திருக்கிறார். மற்றபடி இவருக்கு அதிகப்பட்சம் பரிதவிப்பு எக்ஸ்பிரஷன்களையே கொடுத்திருப்பதால் அப்புக்குட்டியை பார்த்து நாம் பொறாமைப்பட மட்டுமே இந்தச் சிவப்பழகியைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்று நினைக்கிறேன்!

கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளின் இயற்கை அழகை.. அந்த நேட்டிவிட்டியை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்! “இசையமைப்பாளர் உதயனின் இசையில் எனது குடும்பத்தின் சாயல் தெரிகிறது..” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.. அதற்கு அச்சாரமே “ஊரையெல்லாம் காவல் காக்கும்”  பாட்டுதான்..! மனதை வருடும், வார்த்தைகளை மென்று விழுங்காமல் அழகாக ஒலித்து, அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது!

தம்பி இராமையா பாடல்களை எழுதி, வசனத்தை எழுதியிருக்கிறார். நாய்கூட அப்புக்குட்டியை மதிப்பதில்லை என்பதை நிரூபிப்பதற்காக டீக்கடையில் வறுக்கியை வாங்கி நாய்க்கு போட்டு சோதனை செய்யும் காமெடி, வசனமும், கதையும் சேர்ந்தது.. அண்ணியின் கையைத் தட்டிவிட்டு மரியாதை முக்கியம் என்று அப்புக்குட்டி மிரட்டுவதும்.. தம்பி இராமையாவின் மீதான மரியாதையை நிரூபிக்கும் வகையில் பலரும் அவரை கிண்டல் செய்யும் வசனங்களும் அவர் நல்லதொரு ரைட்டர் என்பதை நிரூபிக்கிறது..!

அந்த புது மாப்பிள்ளைக்காரன் அடுத்த பஸ்ஸை பிடித்து ஓடி வந்திருந்தாலோ, அல்லது போலீஸிடம் சிக்கிய பின்பு தப்பித்து இவர்களைத் தேடி வந்திருந்தாலோ படம் உடனுக்குடன் முடிஞ்சு போயிருக்கும்.. அல்லது ஸ்வாதியே திரும்பிப் போயிருந்தாலும் கதை காலிதான்.. இரண்டேகால் மணி நேர படத்திற்காக கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதியிருப்பதால், அந்த லாஜிக்கை நாம் சந்தேகிக்கவே கூடாது.. முடியாது..! எடுத்தவரைக்கும் படம் ரசிக்கும்படியாகத்தான் உள்ளது..!

ஒரேயொரு குறை.. திருநங்கைகளை கிண்டல் செய்வது போல பாடல் காட்சியை வைத்திருப்பதும், அது கதைக்கு ஒட்டாமல் தனித்து நிற்பதும்தான்..! இந்த ஆட்டத்தில் பாண்டியராஜன் வேறு..!? ஏன், எதற்கு என்றுதான் தெரியவில்லை..!

வன்முறை. ஆபாசம்.. அதீத கவர்ச்சி.. இது எதுவுமில்லாமல் பொழுது போனால் போதும் என்று நினைத்தீர்களேயானால் அவசியம் இந்தப் படத்திற்குச் செல்லவும்.
Key word:



1 comment:

  1. Copied from
    http://truetamilans.blogspot.com/2012/09/blog-post_7.html&type=P&itemid=253460

    ReplyDelete

ADVERTISE HERE.

space for ads