திருமணம் சிறப்பாக முடியும்.
உழைப்பே ஓய்வுக்கு திறவுகோல், சுறுசுறுப்பே செல்வத்துக்கு திறவுகோல் என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தையும் கௌரவத்தையும் குழந்தை பாக்யத்தையும் வீடு, மனை சேர்க்கையையும் தந்த குருபகவான் இப்போது 28.5.2013 முதல் 12.6.2014 வரை 6ம் வீட்டில் மறைவதால் முன்கோபம் அதிகமாகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாகப் பேச வேண்டி வரும். நீங்கள் மாறிவிட்டதாக சிலர் சொல்லிக் கொள்வார்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் அவ்வப்போது பழுதாகும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். பிள்ளைகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகள் எடுக்கக்கூடும்.
பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சண்டை வரும். கணவன்மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. வீண் சந்தேகமும், ஈகோ பிரச்னையாலும் பிரிவு வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். குருபகவான் உங்களின் தன ஸ்தானத்தை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. சில இடங்களில் வளைந்து பேசி காரியத்தை முடிப்பீர்கள். 10ம் வீட்டை குரு பார்ப்பதால் புது வேலை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வேலைச்சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். 12ம் வீட்டையும் குரு பார்ப்பதால் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சாதுக்கள், சந்நியாசிகளின் ஆசி கிட்டும். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் சுக, லாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முக்கியப் பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும் மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார். அவருடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நட்பு வட்டம் விரியும். கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும். கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். திருமணம் கூடி வரும்.
சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றம் வந்து செல்லும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் திருதியாதிபதியும் விரையாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம், விலை உயர்ந்த நகையை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்து வகையில் வழக்கு வந்து நீங்கும்.
13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். வேலையாட்களை விரட்டாதீர்கள். தொழில் ரகசியங்களை சொல்ல வேண்டாம். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டி வரும். மர வகைகள், ஸ்டேஷனரி, பதிப்பகங்கள், கமிஷன் மூலம் லாபம் பெறுவீர்கள்.
வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என்று செல்லாமல் முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வீண் பழிகளை சுமக்க வேண்டியது வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராகப் பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டியது வரும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடிப் பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள். காதல் கசந்து இனிக்கும்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் போராடி வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். திருமணம் சிறப்பாக முடியும். மாணவ மாணவிகளே! விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள். விடைகளையும் எழுதிப் பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். கிசுகிசுத் தொல்லைகளால் டென்ஷனாவீர்கள். அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். கோஷ்டிப் பூசலாலும் எதிர்க்கட்சியினராலும் அலைகழிக்கப்படுவீர்கள். விவசாயிகளே! அகலக்கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த குரு மாற்றம் நெருக்கமானவர்களின் மற்றொரு முகத்தை காட்டிக் கொடுப்பதுடன், பணத்தின் அருமையை புரிய வைப்பதாகவும் சகிப்புத் தன்மையால் கொஞ்சம் வளர்ச்சியையும் தரும்.
பரிகாரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment