Pages

Sunday 19 May 2013

மீனம் குரு பெயர்ச்சி -பொதுப் பலன்கள்,28.5.2013 முதல் 12.6.2014 வரை.

சம்பளம் உயரும்.
செடியாக இருந்தபோது வளையாதது மரமான பிறகு வளையாது என்பதை அறிந்த நீங்கள், குழந்தைகளை கட்டுப்பாடுடன் வளர்ப்பதில் வல்லவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிநாதனான குருபகவான் எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்க விடாமல் தடுத்தார். சின்னச் சின்ன வேலைகளைகூட போராடி முடித்தீர்கள். சொந்த பந்தங்களுக்காக செலவு செய்தும் நன்றியில்லாமல் போனதே! இப்போது குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உள்ள காலகட்டம் வரை 4ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் ஓரளவு நீங்கும். இதுவரை தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். விஐபிகள் அறிமுகமாவார்கள். நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் 4ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும் நடத்தைக் கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.
    மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அரசாங்கத்தின் முறையான அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். குடிநீர்க் குழாய், கழிவு நீர்க் குழாய் அடைப்பு வந்து நீங்கும். குடும்பத்தில் ஈகோ பிரச்னையால் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தின் பொருட்டு அல்லது மனத்தாங்கலின் பொருட்டு கணவன் மனைவி பிரிய வேண்டி வரும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி தாமதமாக கிடைக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கும் அவ்வப்போது நெஞ்சுவலி, கைகால் வலி, அசதி வந்து போகும். தாயாருடன், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபுறம் செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும். வாகனத்தின் இன்சூரன்ஸ் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் தன, பாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
       தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரி செய்யாதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப்போய் பெயர் கெடும். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் சிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
     அரைகுறையாக நின்ற கட்டிடப் பணியை தொடங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம். ஷேர் மூலமாகவும் பணம் வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களின் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சில நேரங்களில் எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்கத் தவறாதீர்கள்.
      அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளும் அறிவாற்றலை பெறுவீர்கள்.  புது ஏஜென்சி யோசித்து எடுங்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஆட்டோ மொபைல் வகைகளால் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள்மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். சம்பளம் உயரும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். ஆனால், சக ஊழியர்களுடன் பிரச்னைகள் வரும். சிறு அவமானங்கள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! தாயாருடன் மோதல் வரும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.
     காதல் விவகாரத்தை தள்ளி வைத்து உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். மாணவ மாணவிகளே! லட்சியப்போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் இனி வேண்டாம். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுங்கள். உண்மையான நண்பர்களை உணர்ந்து கொள்ளுங்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள் வரக்கூடும். பரபரப்பாக இருப்பீர்கள். ஆனால் பணவரவு சுமார்தான். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும் எதிர்க் கட்சியினரால் அமுக்கப்பட்டாலும் அனைத்தையும் முறியடித்து முன்னேறுவீர்கள். உண்ணா விரதம், ஊர்வலங்களை முன்னின்று நடத்தி புகழடைவீர்கள். விவசாயிகளே! மரப்பயிர் லாபம் தரும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
     இந்த குரு மாற்றம் உங்களை நாலாவிதத்திலும் சிரமப்பட வைத்தாலும் புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அய்யாவாடியில் அருளும் பிரத்யங்கரா தேவியை தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads