Pages

Sunday 19 May 2013

விருச்சிகம் குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்-28.5.2013 முதல் 12.6.2014 வரை.


புதிய பதவி வரும்
அநீதியான சமாதானத்தை விட நீதியான யுத்தமே மேல் என நினைக்கும் நீங்கள், ஒருபோதும் அதர்மத்திற்கு துணை போக மாட்டீர்கள். தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பதே உண்மையான பிரார்த்தனை என்று நினைப்பீர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும் செல்வாக்கையும் ஓரளவு பணவரவையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை 8ம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சின்னச் சின்ன மோதல்கள் வந்து நீங்கும். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதால் அவ்வப்போது நல்லது நடக்கும்.
குருபகவான் 2ம் வீட்டை பார்ப்பதால் சாணக்கியத் தனமாகப் பேசி பல நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள்.
       வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். இழுபறியாக இருந்த அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குரு உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, டென்ஷன் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தீரும். பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். குரு உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமை கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.  
26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.
      தூக்கம் குறையும். காலில் அடிபடும். புதுவேலை கிடைக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 29.8.2013 முதல் 26.1.2014 மற்றும் 13.4.2014 முதல் 12.6.2014 வரை உங்களின் தன, பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிலும் வெற்றி கிட்டும். விஐபிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். மகனுக்கு வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும்.
      13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இளைய சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள். குரு 8ல் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களுக்கு அதிக முன் பணம் தர வேண்டாம். அவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.
      சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனியுங்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதித்து செலுத்த வேண்டி வரும். பங்குதாரர்களால் இருந்த கெடுபிடிகள் விலகும்.  மூலிகை, தேங்காய் மண்டி, எலக்ட்ரிக்கல், துரித உணவகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டாம்.  முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். புது சலுகைகளும் பதவிகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களே! யதார்த்தமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
      உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். திருமணம் தாமதமாகி முடியும். வேலை கிடைக்கும். மாணவமாணவிகளே! அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணக்கும் கொஞ்சம் கசக்கும். அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களை கேட்பதில் தயக்கம் வேண்டாம். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறுசிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி சாதிப்பீர்கள். சகாக்களுடன் உரிமையாகப் பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். விவசாயிகளே! தக்காளி, வெண்டை, பீன்ஸ், எள் வகைகளால் லாபம் உண்டு.
       இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
கடலூர்  திருவந்திபுரத்தில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை தரிசித்து வணங்கி வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads