மேஷம்:
உணர்ச்சி பூர்வமாகப் பேசி அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கும் நீங்கள், ஆத்மார்த்தமாக பழகுவதால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். 6ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்ப்படுத்திய சுக்கிரன் இந்த மாதம் வலுவாக வீடுகளில் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனத்தாங்கல், ஈகோ பிரச்னை எல்லாமும் நீங்கும். 17ந் தேதி முதல் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் பணம் எதிர்பார்த்தபடி வரும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும்.
கடந்த ஒருமாதமாக நீச்சமாகி சனியுடன் நின்ற உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 8ம் வீட்டில் மறைந்திருப்பதால் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பாகப்பிரிவினை பிரச்னை முடிவுக்கு வரும். ஆனால் சூரியன் ராகுவுடன் இணைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம்.
ராசிநாதனான செவ்வாய் இந்த மாதம் முழுக்க குருபகவான் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். குருபகவான் வலுவாக இருப்பதால் அனுபவப் பூர்வமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். டிசம்பர் 2ம் தேதி முதல் நிழல் கிரகமான கேது ராசிக்குள் வந்தமர்வதால் வீண் சந்தேகம் வரும். தலைச்சுற்றல், முதுகு வலி வரக்கூடும். 2ந் தேதி முதல் 7ல் ராகுவும் நுழைந்து சனியுடன் சேர்வதால் மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கௌரவப் பிரச்னைகள் வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் மோதல்கள் வந்துபோகும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சித் தலைமையை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்கிற எண்ணம் வரும்.
மாணவர்களே! கட்டுரை, இசை, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். ஸ்டேஷனரி, ரியல் எஸ்டேட், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. சூழ்ச்சிகளை தாண்டி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
விவசாயிகளே! மகசூல் அதிகரிக்கும். அடகிலிருந்த பத்திரங்கள், நகைகளை மீட்க வழி பிறக்கும். முன்கோபத்தையும், அலட்சியப் போக்கையும் தவிர்க்க வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 18, 19, 20, 21, 22, 29, 30 டிசம்பர் 1, 2, 7, 8, 9, 10, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 16ந் தேதி காலை 10:30 மணி வரை மற்றும் டிசம்பர் 11ந் தேதி மாலை 4 மணி முதல் 12 மற்றும் 13ந் தேதி மாலை 6:30 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்:
மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
ரிஷபம்:
இரும்பை ஈர்க்கும் காந்தம்போல் இனிமையாக, யதார்த்தமாக பேசும் நீங்கள், பொது நலத்துடன் கூடிய தன்னலம் உள்ளவர்கள். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சனி பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். மனப் பக்குவம் கிடைக்கும். 17ந் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன், சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டில் நுழைவதால் அடுக்கடுக்காக சவால்களை சந்திக்க வேண்டிவரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும்.
எந்தக் காரியத்தை தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிவரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். 4ந் தேதி வரை புதன் 6ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு குறையும். 5ந் தேதி முதல் 7ல் நுழைவதால் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடந்த மாதம் முழுக்க நீச்சமாகியிருந்த சுகாதிபதி சூரியன் 7ம் வீட்டில் அமர்ந்ததால் தாயாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.
தந்தைவழிச் சொத்தை பெறுவதில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆனால், ராகுவுடன் சேர்வதால் பெற்றோருக்கு சின்னச் சின்ன மருத்துவச் செலவுகள் இருக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். 8ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு வந்து நீங்கும். ஜென்ம குரு தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வந்து போகும்.
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! திடீரென்று அறிமுகமாகும் நண்பர்களை நம்பி பழைய நண்பர்களை விட்டுவிடாதீர்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துபோகும்.
மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். நினைவாற்றல் அதிகரிக்கும். வியாபாரத்தில் 5ந் தேதி முதல் ஓரளவு லாபம் வரும். சந்தை நிலவரத்தை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கள். அவசரப்பட்டு முதலீடு செய்ய வேண்டாம்.
கலைத்துறையினரே! மறைமுகப் போட்டிகள் இருக்கும். வீண் வதந்திகள், கிசுகிசு தொந்தரவுகள் வந்துபோகும்.
விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை பெரிது படுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. பம்பு செட் பழுதாகும். சிக்கனமும் சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 19, 21, 22, 23, 24, 25, 26 டிசம்பர் 1, 2, 3, 4, 5, 6, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 16ந் தேதி காலை 10:30 மணி முதல் 17, 18ந் தேதி மதியம் 1:30 மணி வரை மற்றும் டிசம்பர் 13ந் தேதி மாலை 6:30 மணி முதல் 14, 15 ஆகிய நாட்களில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசியுங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
மிதுனம்:
சாதுவாக இருந்து சாதிப்பதில் வல்லவர்கள் நீங்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சூரியன் அமர்ந்து உங்களை பாடாய்படுத்தினார். கொஞ்சம் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். முன்கோபத்தால் சிலரின் நட்பையெல்லாம் இழந்தீர்கள். பிள்ளைகளாலும் ஒருபக்கம் தொந்தரவுகள் இருந்தது. இப்போது அந்த நிலை மாறி சூரியன் 6ம் வீட்டில் நுழைந்திருப்பதால் சவால்களில் வெற்றி உண்டு. பணவரவு அதிகரிக்கும். வழக்கு சாதகமாக முடிவடையும். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
7ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண், தொண்டை எரிச்சல் வரக்கூடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 12ல் மறைந்திருந்த கேதுவால் தூக்கமின்மை, அலைச்சல், அடிக்கடி பயணங்கள் இருந்ததே! 2ந் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் எதிலும் நன்மை உண்டாகும். 2ந் தேதி முதல் ராகு 5ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். சனியும் 5ல் தொடர்வதால் பிள்ளைகள் கோபமாகப் பேசுவார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு 12ல் நீடிப்பதால் உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். 5ந் தேதி முதல் 6ல் புதன் மறைவதால் உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.
கன்னிப் பெண்களே! காதல் கனியும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
மாணவர்களே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். நல்ல நட்புச் சூழல் உருவாகும். ராசிநாதன் புதன் 4ந் தேதி வரை 5ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். பற்று வரவு உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். புதிய வேலையைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி புது வேலை அமையும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
விவசாயிகளே! வங்கிக் கடன் தள்ளுபடியாகும். எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 16, 17, 23, 24, 25, 26, 27, 28 டிசம்பர் 3, 4, 5, 6, 7, 8, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 18ந் தேதி மதியம் 1:30 மணி முதல் 19 மற்றும் 20ந் தேதி மாலை 5:30 மணி வரை மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை மயூரநாதரை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
கடகம்:
யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க சுக்கிரன் செல்வதால் எவ்வளவு செலவு வந்தாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களை தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீண் விவாதங்களெல்லாம் குடும்பத்தில் நீங்கும். பிரபல யோகாதிபதியான செவ்வாய் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். பங்காளி பிரச்னை, சொத்துச் சிக்கல், பாகப் பிரிவினைகளுக்கெல்லாம் நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால், உங்களுக்கு தனாதிபதியான சூரியன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது பணப் பற்றாக்குறை ஏற்படும். தந்தையாரின் உடல்நிலை லேசாக பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும்.
அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் திடீரென்று அறிமுகமானவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். 2ந் தேதி முதல் ராகு 4ம் வீட்டில் நுழைவதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது.
கன்னிப் பெண்களே! பெற்றோர் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த பொருளை வாங்கித் தருவார்கள். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
மாணவர்களே! உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்குங்கள். குரு லாப வீட்டில் நீடிப்பதால் வியாபாரத்தை நவீன மயமாக்குவீர்கள். சில மாற்றங்களையும் கொண்டு வருவீர்கள். கணிசமாக லாபம் உயரும். இரும்பு, கட்டிடம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். 2ந் தேதி முதல் கேது ராசிக்கு 10ம் வீட்டில் நுழைவதால் கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும்.
கலைத்துறையினரே! கற்பனைத்திறன் வளரும்.
விவசாயிகளே! இழுபறியில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். மாற்றுப் பயிரால் லாபமடைவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிப்பதுடன்
அதிகாரப் பதவியில் அமர்த்தப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 16, 17, 18, 19, 26, 27, 28, 29 டிசம்பர் 5, 6, 7, 8, 9, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 20ந் தேதி மாலை 5:30 மணி முதல் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.
பரிகாரம்:
திருவையாறுக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரில் அருளும் ஹரசாப விமோசனப் பெருமாளை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
சிம்மம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் ஆர்வம் காட்டும் நீங்கள், கால் வயிறு கஞ்சி குடித்தாலும் களங்கப்படாமல் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். 17ந் தேதி முதல் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் மனதிலே ஒரு தெளிவு பிறக்கும். குழப்பங்கள் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்களால் பண உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். சனிபகவான் 3ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். செவ்வாய் 5ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அன்பாகச் சொல்லி புரிய வையுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 2ந் தேதி முதல் ராகு 4ம் வீட்டை விட்டு விலகி 3ம் வீட்டில் அமர்வதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாயாருக்கு இருந்த நோய் குணமடையும்.
முடிக்கப்படாமல் அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை முழுவீச்சில் முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். அந்தஸ்து உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். 2ந் தேதி முதல் கேது ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் கொஞ்சம் பணப்பற்றாக்குறை இருக்கும். உங்கள் ராசிநாதனான சூரியன் கேந்திர பலம் பெற்று வலுவாக காணப்படுவதால் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசியலில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மாணவர்களே! சோம்பல் நீங்கும். கெட்ட பழக்கங்கள் விலகும். மதிப்பெண் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
10ல் குரு நீடிப்பதால் உத்யோகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவார்கள். ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
கலைத்துறையினரே! புது வாய்ப்புகளால் பேசப்படுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
விவசாயிகளே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மக்காச்சோளம், துவரை, கரும்பு லாபம் தரும். விட்டதை பிடிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 19, 20, 21, 22, 30 டிசம்பர் 1, 2, 8, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 23, 24 மற்றும் 25ந் தேதி காலை 8:30 மணி வரை வீண் பயம், கவலைகள் வந்துபோகும்.
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு செருப்பும் கம்பளியும் வாங்கிக் கொடுங்கள்.
கன்னி:
வம்புச் சண்டைக்கு போகாமல் வந்த சண்டையையும் விடாமல் வாழும் நீங்கள், பொதுவாக அமைதியையே விரும்புவீர்கள். கடந்த ஒரு மாத காலமாக ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஏடாகூடமாக பேச வைத்து, உணர்ச்சிவசப்பட வைத்த சூரியன் இந்த மாதம் 3ம் வீட்டில் நுழைந்ததால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
ஆனால் ஏழரைச் சனி நடைபெறுவதால் கொஞ்சம் மந்தம், மறதி, தூக்கம் இருக்கும். எந்தவொரு காரியமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக ஈடுபடுவது நல்லது. மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். கால் கட்டை விரலில் அடிபடக் கூடும். பல்வலி நீங்கும். பார்வைக் கோளாறு ஏற்படக்கூடும். உங்கள் ராசிநாதனான புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிலும் மகிழ்ச்சி தங்கும். அலைபாயும் மனது அடங்கும்.
உங்களின் தன பாக்யாதிபதியான சுக்கிரன் 17ந் தேதி முதல் ஆட்சிபெற்று அமர்வதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீடு வாங்குவது, கட்டுவது நல்ல விதத்தில் முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தை வழியில் மதிப்பு, மரியாதை கூடும்.
அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.
கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதுவேலை கிடைக்கும்.
மாணவர்களே! உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோரை தலை நிமிரச் செய்வீர்கள். குருபகவானும் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றமும் லாபமும் உண்டு. பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மருந்து, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
உத்யோகத்தில் மரியாதை கூடும். மேலதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சிலர் அலுவலகத்தை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். மேற்கொண்டு தேர்வு எழுதி பதவி உயர்விற்கு உங்களை தகுதிப்படுத்திக் கொள்வீர்கள்.
கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
விவசாயிகளே! பூச்சி, எலித் தொல்லை குறையும். வீட்டில் நல்லது நடக்கும். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 16, 17, 18, 23, 24 டிசம்பர் 2, 3, 4, 5, 6, 10, 12, 13, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 25ந் தேதி காலை 8:30 மணி முதல் 26 மற்றும் 27ந் தேதி இரவு 7:30 மணி வரை பழைய பிரச்னைகள் தலைதூக்கும்.
பரிகாரம்:
திண்டிவனம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், மயிலத்திற்கு அருகேயுள்ள திருவக்கரை வக்ரகாளியை தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
துலாம்:
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது உங்களைப் பொறுத்தவரை உண்மைதான். நீங்கள் கோபப்பட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே நின்று கொண்டிருந்த சூரியன், இப்போது ராசியை விட்டு விலகியதால் ஆரோக்யமும் அழகும் கூடும். அடி வயிற்று வலி, பல்வலி நீங்கும். இழுபறியாக இருந்து வந்த அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஆனால் 2ல் அமர்ந்ததால் அவ்வப்போது கண்வலி, பார்வைக் கோளாறு வந்துபோகும். பேச்சில் காரம் வேண்டாம்.
உங்களின் ராசிநாதனான சுக்கிரன் கடந்த மூன்று, நான்கு மாதங்களாக பலவீனமாக காணப்பட்டதால் பல காரியங்கள் இழுபறியாக இருந்தது. 16ந் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்திருந்த பணமும் கைக்கு வரும். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 2ந் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் தலைச்சுற்றல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும்.
லேசாக வயிற்றுக் கோளாறு வரக்கூடும். 8ல் மறைந்து கொண்டிருக்கும் கேது 2ந் தேதி முதல் 7ல் அமர்வதால் மனைவியின் உடல்நிலை லேசாக பாதிக்கும். சந்தேகத்தால் சின்னச் சின்ன சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். ராசிக்கு 3ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிப்பதுடன், விடைகளை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகள் செய்வது நல்லது. 16ந் தேதி முதல் தொழிலில் ஓரளவு லாபம் வரும்.
கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.
விவசாயிகளே! வரப்புச் சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் குறைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் பயணிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 16, 17, 19, 23, 24, 25, 26 டிசம்பர் 3, 4, 5, 6, 8, 12, 13, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 27ந் தேதி இரவு 7:30 மணி முதல் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் எதிலும் பொறுமை காப்பது நல்லது.
பரிகாரம்:
திருவாரூர் - நாகை பாதையிலுள்ள சிக்கல் சிங்காரவேலனை தரிசியுங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
விருச்சிகம்:
உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழவிடும் நீங்கள், சூழ்ச்சிகளால் புறக்கணிக்கப் பட்டாலும் முடங்கி விடாமல் முயற்சியால் முன்னுக்கு வருவீர்கள். ராசிக்கு 7ல் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்கு 12ல் மறைந்து விரயச் செலவுகளை ஏற்படுத்திய சூரியன் இப்போது ராசிக்குள் நுழைந்திருப்பதால் வீண் அலைச்சல், செலவுகள் குறையும்.
ஆனால், முன்கோபம் அதிகரிக்கும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்குள்ளேயே நின்று கொண்டு அடுத்தடுத்து ஆரோக்ய குறைவையும், அடுக்கடுக்காக பிரச்னைகளையும், எங்கு சென்றாலும் தோல்வியையும், நெஞ்சு வலியையும், இனந்தெரியாத மனக் கவலைகளையும் தந்து கொண்டிருந்த ராகு உங்கள் ராசியை விட்டு 2ந் தேதி முதல் விலகி 12ல் மறைவதால் இதுவரை இருந்து வந்த மனக் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 7வது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கும் மனைவிக்கும் இடையே பெரிய உபாதைகளையும், சந்தேகங்களையும், ஈகோ பிரச்னைகளையும் தந்த கேது பகவான் 2ந் தேதி முதல் 6ம் வீட்டில் வந்தமர்வதால் கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
பழைய கடன் பிரச்னை தீரும். இழுபறியாக தள்ளிப்போய் கொண்டிருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். ராசிநாதனான செவ்வாய் வலுவாக இருப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் திருப்தி தரும்.
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்களே! உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். ஏழரைச்சனி நடப்பதால் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். அவர்களை பக்குவமாக தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.
விவசாயிகளே! மகசூல் அதிகரிக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். சந்தேகங்கள், சங்கடங்கள் நீங்கி நிம்மதி தென்படும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 17, 18, 19, 20, 22, 25, 26, 29 டிசம்பர் 5, 6, 7, 8, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 30 டிசம்பர் 1 மற்றும் 2ந் தேதி மாலை 6 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:
அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.
தனுசு:
கடல் அலை ஓயாததைப்போல வாழ்க்கை என்றால் பிரச்னைகளும் இருக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருப்பீர்கள். உங்கள் ராசியிலேயே செவ்வாய் நிற்பதால் உங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள்.
உங்களின் பாக்யாதிபதியான சூரியன் 12ல் மறைந்திருப்பதால் செலவுகள் அடுக்கடுக்காக வரும். தந்தைவழியில் மனத்தாங்கல் வந்துபோகும். தந்தைவழிச் சொத்தை போராடிப் பெறுவீர்கள். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். ராசிநாதனான குருவும் பலவீனமாக இருப்பதால் சிலர் உங்களின் மீது வீண்பழி சுமத்தி பேசுவார்கள். அதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். லாப வீட்டிலேயே சனி வலுவாக நீடிப்பதால் எவ்வளவு செலவுகள், அலைச்சல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் வல்லமையும் உண்டாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
புதன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். 2ந் தேதி முதல் ராகு லாப வீட்டில் வந்தமர்வதால் திடீர் பணவரவு, பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடந்த ஒன்றரை வருடமாக இருந்த தூக்கமின்மை, பயம் விலகும். ஆனால் 2ந் தேதி முதல் கேது 5ம் வீட்டில் வந்தமர்வதால் அவ்வப்போது கொஞ்சம் கோபப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.
கன்னிப் பெண்களே! சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.
மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படியுங்கள். விடுபட்ட பாடத்தில் தேர்ச்சி பெறுவீர்கள். லாப வீட்டில் சனி நிற்பதால் வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். துணி, உணவு, கன்ஸ்ட்ரக்ஷன் மூலம் லாபம் வரும்.
உத்யோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.
கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.
விவசாயிகளே! வங்கிக் கடனுதவி கிட்டும். பழைய மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள். வாய்க்கால் பிரச்னை தீரும். எதிர்நீச்சலில் வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 19, 20, 21, 22, 28, 29, 30 டிசம்பர் 8, 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 2ந் தேதி மாலை 6 மணி முதல் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் முன்கோபத்தால் பகை உண்டாகும்.
பரிகாரம்:
சென்னை-திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசியுங்கள். சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.
மகரம்:
மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காமல் தானே முயன்று முதலிடத்தை பிடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், ஊர் நலனுக்காக உழைத்துக் கொண்டேயிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 12ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் சிக்கனமாக எதையும் செய்யப் பாருங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். தூக்கமில்லாமல் போகும். பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 17ந் தேதி முதல் ஆட்சி பெற்று அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு கட்டுவீர்கள்.
சிலர் வீடு வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சகோதரருக்கு திருமணம் முடியும். சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். இதுவரை உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் நின்று கொண்டு ஓரளவு லாபத்தை தந்து வந்த ராகு 2ந் தேதி முதல் 10ம் வீட்டில் சென்று அமர்வதால் கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 5ம் வீட்டில் அமர்ந்திருந்த கேது 2ந் தேதி முதல் 4ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளுக்குள் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். அவர்கள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.
கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். புது நட்பு மலரும்.
மாணவர்களே! உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். ஏற்றுமதி-இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் வகைகளால் திடீர் லாபம் உண்டாகும்.
உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தொல்லை கொடுத்து வந்த மூத்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். எதிர்பார்த்த புது சலுகைகளும் கிடைக்கும்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க வழி கிடைக்கும். மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 21, 22, 23, 24, 25, 26, டிசம்பர் 1, 2, 3, 10, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 5, 6 மற்றும் 7ந் தேதி காலை 8.30 மணி வரை வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
சீர்காழிக்கு அருகேயுள்ள திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற அளவு உதவுங்கள்.
கும்பம்:
ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடி நிற்கும் கொக்கைப்போல் காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள். கடந்த நான்கைந்து மாதங்களாக சிரமங்களையும் சிக்கல்களையும் தந்து கொண்டிருக்கும் உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் 17ந் தேதி முதல் சொந்த வீட்டில் ஆட்சிபெற்று ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் அதிரடி மாற்றங்களும் முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் முடியும்.
உங்களின் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்று தொடர்வதால் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.
புது வேலை கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். சூரியன் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாகத் திரும்பும். செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் மூத்த சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். பழைய இடத்தை விற்று விட்டு புதிதாக வீடு வாங்குவீர்கள். குரு 4ம் வீட்டிலேயே நீடிப்பதால் மனக் குழப்பம், தடுமாற்றம், வேலைச்சுமை, நிம்மதியற்ற போக்கு வந்து செல்லும்.
2ந் தேதி முதல் 3ம் வீட்டில் கேது அமர்வதால் தாயாருக்கு இருந்த மனவருத்தம் நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் இருந்த ராகு பகவான் 9ம் வீட்டில் நுழைவதால் பணப்புழக்கம் ஓரளவு இருக்கும் என்றாலும் செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.
மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டியது வரும். வாகன உதிரி பாகங்கள், உணவு, பெட்ரோ கெமிக்கல் மூலமாக லாபம் உண்டாகும். பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். 2ந் தேதி முதல் 10ம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் உத்யோகத்தில் திடீர் முன்னேற்றம் உண்டாகும். பதவி, சம்பள உயர்வு உண்டு. இடமாற்றம் கிடைக்கும்.
கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீன ஒட்டுரக விதைகளை பயன்படுத்துங்கள். காய்கறி, பழ வகைகளால் ஆதாயமுண்டு. சோதனைகளை தாண்டி சாதிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 16, 17, 23, 24, 25, 26, 27, 28 டிசம்பர் 3, 4, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 7ந் தேதி காலை 8:30 மணி முதல் 8 மற்றும் 9ந் தேதி மதியம் 1:30 மணி வரை எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை குருபகவானை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
மீனம்:
எதையுமே மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக அலசி ஆராயும் நீங்கள், பீனிக்ஸ் பறவைபோல போராடி உயிர்த்தெழும் குணம் கொண்டவர்கள். உங்களின் தன, பாக்யாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களை கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். டிசம்பர் 1ந் தேதி வரை கேது 3ம் வீட்டில் நிற்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
2ந் தேதி முதல் உங்களின் தன, வாக்கு ஸ்தானமான 2ம் வீட்டில் கேது வந்தமர்வதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். 9ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருந்த ராகு பகவான் 2ந் தேதி முதல் 8ம் வீட்டில் நிற்கும் சனியுடன் சேர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.
3ம் வீட்டில் உங்கள் ராசிநாதனான குரு முடங்கிக் கிடப்பதால் எந்தவொரு வேலையாக இருந்தாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால் தந்தையார் அதிருப்தி அடைவார். அவருக்கு அசதி, நெஞ்சு வலி வந்துபோகும்.
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுங்கள்.
மாணவர்களே! கொஞ்சம் படிப்பில் அக்கறை காட்டுங்கள்.
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை பயன்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். வியாபாரிகள் நலச்சங்கம், இயக்கம் இவற்றிலெல்லாம் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கம்ப்யூட்டர், கட்டிட வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்யோகத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். மேலதிகாரிக்கு நெருக்கமானாலும் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும்.
கலைத்துறையினரே! கிசுகிசுக்கள், வதந்திகள் என்று ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள்.
விவசாயிகளே! மகசூல் அதிகரிக்கும். வயலில் எலித் தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். தைரியமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
நவம்பர் 16, 17, 18, 19, 25, 26, 29 டிசம்பர் 2, 5, 6, 7, 8, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 9ந் தேதி மதியம் 1:30 மணி முதல் 10 மற்றும் 11ந் தேதி மாலை 4 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பரிகாரம்:
காஞ்சி காமாட்சியை தரிசித்து வாருங்கள். சாலையோரம் வாழ் சிறார்களுக்கு உணவும், உடையும் கொடுத்து உதவுங்கள்.
No comments:
Post a Comment