Pages

Thursday 26 December 2013

23.12.2012 இராகு-கேது பெயர்ச்சி .

23.12.2012 அன்று ஞாயிற்று கிழமை திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இராகு-கேது பெயர்ச்சி ஆகிறது. ஜோதிட ரீதியான ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் முன் நோக்கி நகர்கிற தன்மை கொண்டவை. ஆனால் இந்த இராகு-கேது மட்டும் பின்னோக்கி நகர்கிற கிரகங்கள் ஆகும். அதன்படி, விருச்சிகத்தில் இருக்கும் இராகு, துலா இராசிக்கும், ரிஷபத்தில் இருக்கும் கேது, மேஷ இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது. இந்த இராகு-கேது பெயர்ச்சி ஆகும் பொழுது, 12 இராசிகாரர்களுக்கும் எவ்வகையான பலன்களை தந்திடும் என்பதையும், யாருக்கு சாதனை செய்யும்? யாருக்கு வேதனை செய்யும்? என்பதையும் பார்ப்போம்.
மேஷ இராசிக்கு: 
கேது உங்கள் ஜென்ம இராசியிலும், இராகு சப்தமத்திலும் சஞ்சரிக்க போகிறது. பொதுவாக ஜென்மத்தில் கேது அமர்ந்தால், சாதகமும் பாதகமும் மாறி மாறி கொடுக்கும். சூரியன் சாரத்தில் அதாவது, உங்கள் இராசிக்கு பஞ்சமாதிபதி காலில் அமர்வதால் பூர்வீக சொத்து கைக்கு வரும். பிள்ளைகளுக்கு திருமண வாழ்க்கை அமோகமாக நடக்கும். சப்தம இராகு, குருவின் காலில் அதாவது, 9-12க்குரியவன் காலில் அமர்ந்ததால், புதிய சொத்துகள் வாங்கும் சமயத்தில் சற்று கவனம் தேவை. உயர்பதவியில் இருப்பவர்களின் உதவி தேடி வரும். ஸ்தல பயணங்கள் உண்டு. சற்று விரையங்கள் கொடுக்கத்தான் செய்யும். கடல் கடந்து போகக்கூடிய யோகம் உண்டு. 10-11-க்குரியவன் சனியோடு சேர்ந்து, இராகு நன்மை செய்வார். உங்களுக்கு விநாயகர் வழிபாடு அவசியம் தேவை. வியாழ கிழமையில் அருகம்புல் மாலையை விநாயகப் பெருமானுக்கு சமர்பியுங்கள்.
 ரிஷப இராசிக்கு;
 கேது பகவான் உங்கள் இராசிக்கு 12-ல் (விரையத்தில்) அமைந்து, இராகு 6-ல் சஞ்சரிப்பதால் இது யோகமான நேரம். கேது சூரியன் காலில் அதாவது சுகாதிபதி காலில் சஞ்சரிக்க போகிறார். 12-ல் கேது மன உளைச்சல் கொடுத்தாலும், 6-ல் இருக்கும் இராகு லாபாதிபதியான குரு காலில் இருப்பதால், புதிய தொழில் (அ) புதிய திட்டங்கள் துவங்கும். வாகனம் வாங்கும் யோகம் அமையும். உயர்கல்வி படிக்க வசதி பெருகும். சத்ரு ஜெயம் உண்டாக்கும். நாள்பட்ட நோய்நொடிகள் நீங்கும். திருமணதடை விலகி சுபகாரியங்கள் கைக்கூடும். தர்மகர்மாதிபதியாடு சேர்ந்ததால் தொட்டது துலங்கும். ஆகவே இந்த இராகு-கேது பெயர்ச்சி யோகமான பெயர்ச்சி. சிவ வழிபாடு மிகவும் நன்மை தரும். வில்வ இலையால் சிவபெருமானை வணங்கி வாருங்கள். துர்கா தேவியையும் வணங்க வேண்டும்.
மிதுன இராசிக்கு:
 11-ல் கேது, பஞ்சமத்தில் சனியோடு இராகு அமைந்துள்ளார். 11-ல் கேது, 3-க்குரிய சூரியன் காலில் அமரப்போகிறது. பஞ்சமத்தில் இராகு, குரு காலில் அமரப்போகிறது. லாப கேதுவின் பயனால் மனைவியால் நன்மை செய்யும். இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகும். கீர்த்தி-புகழ் உண்டாக்கும். தொழில்- உத்தியோகம் மேன்மை பெறும். வெளிநாட்டு விவகாரம் யோகத்தை கொடுக்கும். பஞ்சம இராகு, 7-10-க்குரியவன் காலில் அமர்ந்ததால், குடும்பத்தில் பகை மறையச் செய்யும். ஆனால் தேவை இல்லா கடன் வாங்கவும் செய்யும். ஆகவே ஜாமீன் – கடன் விஷயத்தில் கவனம் தேவை. காரணம், உங்கள் இராசிக்கு 8-க்குரிய சனியோடு சேர்ந்துள்ளதால் சற்று கவனம், – நிதானம் தேவை. அனுமாரை வணங்குங்கள். அனுமாரை மனதால் நினைத்து தினமும் செந்தூரத்தை உங்கள் நெற்றியில் வைத்து வந்தால் நன்மைகள் தேடி வரும்.
 கடக இராசிக்கு:
கேது, உங்கள் இராசிக்கு 10-ல்லும், இராகு, 4-ல் சுகஸ்தானத்திலும் சஞ்சரிக்கப் போகிறது. 10-ல் கேது, பதவியை கெடுப்பான் என்று பலர் கூறுவார்கள் அது தவறு. தன – குடும்பாதிபதி சூரியன் காலில் கேது அமரப்போவதால் பதவியை கெடுத்தாலும் உங்கள் வாக்கு திறமையால் மீட்டு வருவீர்கள். சுகஸ்தானத்தில் இராகு, குரு காலில் சஞ்சரிப்பதால், விரையங்கள் சற்று ஆகத்தான் செய்யும். வீடு-மனை வாங்கும் பாக்கியம் கிட்டும். அஷ்டமாதிபதி சனியோடு இராகு சேர்ந்ததால் கல்வி தடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கேது, சூரியன் காலில் அமர்ந்ததால் பேச்சாலேயே எல்லாம் ஜெயித்து விடுவீர்கள். பெருமாளையும், அம்பாளையும் வழிபடுவது சிறந்தது. தயிர் சாதத்தை புதன்கிழமையில் தானம் செய்தால், மனதில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.
சிம்ம இராசிக்கு: 
பாக்கியத்தில் கேது அமைந்து திரிதிய சஷ்டமத்தில் இராகு, அதாவது 9-ல் கேது 3-ல் இராகு. இதன் பலனால் சுற்றி இருக்கும் விரோதங்கள் அத்தனையும் தூசாக பறக்கும். சூரியன் காலில் கேது அமர்ந்ததால், தெய்வ அனுகிரகம் கிடைக்கும். பதவி-தொழிலில் மேன்மை பெறும். கடன் தொல்லை நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கீர்த்தி ஸ்தானத்தில் உள்ள இராகு, பஞ்சமாதிபதி குரு காலில் அமரப்போவதால் வாக்கு பலிதம் ஏற்படும். சகோதரர், சகோதரிகளின் உதவி கிடைக்கும். ஆனால் நண்பர்கள் விஷயத்தில் மட்டும் கவனம் தேவை. சிறு பிரச்சனைகள் இருந்தாலும் உடனே பேசி தீர்த்து விடுங்கள். இல்லையென்றால் மண்புழுவும் அனகோண்டா போல ஆகிவிடும். கீர்த்தி இராகு, சாதனை செய்யும் இராகு. துர்கா தேவியையும், பெருமாளையும் வணங்க வேண்டும். துர்கைக்கு சிகப்பு அரளி பூவை சமர்பியுங்கள்.
கன்னி இராசிக்கு:
 உங்கள் இராசிக்கு 8-ல் கேது, 2-ல் இராகு அமைந்துள்ளார். அஷ்டம கேது சற்று ஆட்டி படைக்கத்தான் செய்வான்.  12-க்குரிய சூரியன் காலில் அமர்வதால் விரையங்கள் சற்று ஏற்படத்தான் செய்யும். உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகதிலும், தொழிலிலும் கவனம் தேவை. தனஸ்தானத்தில் இராகு, சுக – சப்தமாதிபதி குருவின் காலில், பஞ்சமாதிபதி சனியோடு அமர்ந்ததால் வரும் பிரச்சினைகளை இராகு சமாளித்து விடுவார். மறைமுக தொல்லை நீக்குவார். நோய்நொடிகளையும் நீக்குவார். குடும்ப பிரச்சினை சுமுகமாக்குவார். உங்கள் சொல்லும், சொல்லுக்கு பலனும் கொடுக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் பாக்கியம் உண்டாக்கும். பொதுவாக நன்மை –தீமை என மாறி மாறி தரும். குலதெய்வ வழிபாடு அவசியம். அபிராமி அந்ததியை தினமும் வீட்டில் ஒலிக்கச் செய்வதால் தடைபடும் காரியங்களின் தடைகள் விலகும்.
துலா இராசிக்கு: 
கேது உங்கள் இராசிக்கு 7-ல் அதாவது சப்தமத்திலும், இராகு ஜென்மத்தில் சனியோடு சஞ்சரிக்கப்போகிறார். கேது பாதகாதிபதி சூரியன் காலில் சஞ்சரிப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. கொடுக்கல்-வாங்கல் விவகாரத்திலும் கவனம் தேவை. திருமண விஷயத்தில் சிந்தித்து செயல்படவேண்டும். கூட்டு தொழில் உஷார். ஜென்ம இராகு, குருவின் காலில் அமர்ந்ததால் கவலை இல்லை. ஆனால் மற்றவர் விஷயங்களுக்காக தேவையில்லாமல் முன் நின்று பேசாதீர்கள். அதனால் புகழ், கௌரவம் பாதிக்கும். ஜென்மசனி வேறு சற்று தொல்லை கொடுத்தாலும், பூர்வ புண்ணியாதிபதியாக இருப்பதால் தீமைகள் விலகி நன்மைகள் செய்யும். பொதுவாக உங்களுக்கு இராகு கெடுக்க மாட்டான். கேதுதான் மக்கர் பண்ணுவான். பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். தினமும் 23 தடவை ஸ்ரீஇராம ஜெயம் எழுதினால் நன்மைகள் தேடி வரும்.
விருச்சிக இராசிக்கு: 
கேது, உங்கள் இராசிக்கு ரோகஸ்தானத்தில் அதாவது, 6-ல்லும், இராகு விரையத்தில் அதாவது 12-ல் சனியோடு சேர  போகிறார்கள். ரோகஸ்தானத்தில் கேது அமர்ந்தாலும், கர்மாதிபதி சூரியன் காலில் அமர்வதால் ரோக நிவர்த்தி, கடன் நிவர்த்தி ஏற்படும். சற்று விரையங்களும் வரலாம். முன்னோர்களின் ஆசியால் குடும்பம் சுபிக்ஷம் பெறும். விரையத்தில் இராகு, குரு காலில் அமர்வதால், குடும்பத்தில் சுப செலவு, திருமண விவகாரம், குழந்தை பாக்கியம் போன்ற சுபிக்ஷமான, மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். அயல்நாடு பிரயாணம், அன்னியர் உதவி கிட்டும். இடப்பெயர்ச்சி ஏற்படும். குரு காலில் அமர்ந்து 12-ல் இருப்பதால் எதிர்பாரா லாபம் உண்டு. பொதுவாக இது சாதனையான நேரமே. ஸ்ரீ மகா லஷ்மியை வணங்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் இனிப்பை தானம் செய்யுங்கள். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
தனுசு இராசிக்கு:
 உங்கள் இராசிக்கு கேது பஞ்சமத்தில் அதாவது 5-ல் சஞ்சரிக்கப் போகிறார். இராகு, 11-ல் லாபத்தில் சனியோடு சஞ்சரிக்கப்போகிறார். பஞ்சம கேது, பாக்கியாதிபதி சூரியன் காலில் அமர்வதால் பூர்வீக சொத்து பிரச்சனை ஏற்பட்டு முடிவுக்கு வரும். தந்தை வழியில் செலவுகள் ஏற்படும். புத்திரர் வழியில் தனலாபம் உண்டு. தெய்வ காரியங்கள், ஸ்தல பயணம் அதிகம் இருக்கும். தாய் மாமன் வகையில் சில செலவுகள் வரலாம். மனைவி வழியில் லாபம் உண்டு. லாப இராகு, குரு காலில் அமர்வதால் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சம்பாதிப்பதை சேமித்து வைக்க வேண்டும். வீண் விரையங்கள் ஆகும். பித்ருக்களை மனதால் வணங்குங்கள். விஷ்ணு பகவானை வழிபடுங்கள்.
 மகரம் இராசிக்கு: 
உங்கள் இராசிக்கு கேது சுகஸ்தானத்திலும், இராகு 10-ல் கர்மாதிபதி ஸ்தானத்தில் அமரப் போகிறார்கள். கேது 4-ல் அமர்வதால், நாலு இடம் போனேன் – நாலு பேரை பார்த்தேன், ஆனால் அலைச்சல்தான் மிச்சம், லாபம் ஒன்றும் இல்லை. என்று கூற வைப்பான். காரணம், கேது அஷ்டமாதிபதியான சூரியன் காலில் இருப்பதால், தேவை இல்லா விரோதம், விரையம் வரும் உஷார். 10-ல் இருக்கும் இராகு 12-க்குரிய குருவின் காலில் இருப்பதால் தடைப்பட்ட கல்வி, தடைப்பட்ட திருமணம் ஆகியவை சுபமாக நடக்கும். ஜென்மாதிபதி சனி சேர்ந்ததால், உங்கள் மீது பாறையே மோத வந்தாலும் பஞ்சாக மாறி பறக்கும். புதிய தொழில், பதவி உயர்வு, பிராயணங்கள் எல்லாம் லாபமாகவே நடக்கும். வலம்புரி சங்கு வைத்து பூஜிக்க வேண்டும். தினமும் அந்த சங்குக்கு பாலிலோ அல்லது தண்ணீரிலோ அபிஷேகம் செய்ய வேண்டும். ஒளிமையமான எதிர்காலம் நாடி வரும்.
கும்பம் இராசிக்கு: 
உங்கள் இராசிக்கு 3-ல் கேது, அதாவது உங்களின் கீர்த்தி ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். வெற்றி-புகழ்- கீர்த்தி வாரி வழங்குவார். காரணம், சப்தமாதிபதி சூரியன் காலில் அமர்வதால் அன்னியர்களின் உதவி தேடி வரும். நண்பர்கள் உதவியும் கிடைக்கும். மனைவி வழியில் லாபம் கொடுக்கும். பொன்-பொருள் சேரும். பாக்கிய இராகு அதாவது, 9-ல் சஞ்சரிக்கப் போகும் இராகு, குரு காலில் இருப்பதால், தேனும் பாலும் போல எல்லாம் இனிதாக நடக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உயர் அதிகாரிகள் வசம் கவனத்துடன் இருக்கவும். கடன் கொடுப்பது, தேவையில்லாமல் கடன் வாங்குவதில் கவனமாக இருங்கள். குரு காலில் இருப்பதால் எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருங்கள். இல்லையெனில் சறுக்கி விழ வைப்பான். எந்த ஒரு விஷயத்தை தொடங்குவதாக இருந்தாலும் எச்சரிக்கையோடும், பொறுமையாகவும் செய்வது நல்லது. பாதகாதிபதி காலில் இராகு இருக்கிறான் என்பதால் நிதானம் தேவை. திருப்பதி பெருமாளை வணங்க வேண்டும். தினமும் வெங்கட சுப்ரபாதத்தை வீட்டில் ஒலிக்கச் செய்வதால் ஸ்ரீலஷ்மி காடக்ஷம் உண்டாகும்.
மீனம் இராசிக்கு: 
உங்கள் இராசிக்கு கேது தன-குடும்ப-வாக்கு ஸ்தானம் என்கிற 2-ல் அமைகிறார். இராகு அஷ்டமத்தில் அதாவது 8-ல் சஞ்சரிக்க போகிறார். கேது, வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், பேசும் போது நிதானமாக பேசுங்கள். அவசரப்பட்டு வார்த்தை விட வேண்டாம். முன் கோபம் வரத்தான் செய்யும். காரணம், 6-க்குரிய சூரியன் காலில் இருப்பதால், தேவை இல்லா சஞ்சலம் உண்டாக்குவான். குடும்பத்தில் சுப செலவு வரும். பிள்ளைகளுக்கு திருமணம் பாக்கியமும், திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணமும் கைக்கூட இராகு பகவான் அருள் செய்வார். குரு காலில் அதாவது ஜென்மாதிபதி காலில் இருப்பதால், எதிரிகள் அடி பணிவர். தெய்வ நம்பிக்கை மிக அவசியம். புதிய தொழில், வீடு-வாகனம் அத்தனையும் அமையும். சூரியன் காலில் இருக்கும் கேது, குழப்பத்தை உண்டாக்குவது போல் இருக்கும். ஆனால் நீங்கள் குழம்ப வேண்டாம். எல்லாம் இறைவனின் அருளாலும் ஆசியால் ஜெயம், NO  பயம். முருகப் பெருமான் வழிபாடு அவசியம். தினமும் கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்தால் இன்னல்கள் அனைத்தும் விலகி, வெற்றி மேல் வெற்றி தரும்.


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads